Sunday, June 3, 2012

அனாதை இரவு


பால் பழம் உண்டிருந்தும்
பசித்துக் கொண்டு தான்
இருக்கின்றது இந் நிசியில் ..!!
விளக்குகள் 
நமக்குத் தேவையில்லை                        
நம் போர்வை உலகம் 
வெளிச்சமாகும் ...!!!

உன் சேலைத் தாவணித் 
தலைப்பிலே சிக்கிய 
காதலும்
கைப்பிள்ளை தானடி 
அதைக் கட்டிலில்
கட்டிச் சீராட்டடி 

மல்லிகைச் சரங்களையும்
என்னால் எதிரியாய் 
உணரமுடிந்தது 
மெத்தையில் தான் 
கற்கின்றாய் என்னிடம் 
தாய்மையாகும் வித்தைகளை...!!!

தெருநாய் ஓலம் மட்டும் 
தெய்வீக கானமாய் ஒலித்தது 
வீதி விளக்குகள் -இன்று தான் 
நமக்கு-ஜென்ம
விரோதியாய் மாறின 

கட்டில் கால்கள் 
நான்கும்
கண்கள் மூடியதடி
வெட்கத்திலும்
நம் வெறுமை தோய்ந்த இரவிலும்

உதடுகளுக்கும்
காது முளைத்து 
என்ன ரகசியம் 
பேசிக் கொள்கின்றன 
காலைவரை ...!!!
இடையிடையே
சண்டையிட்டு முட்டிக் கொண்டும் 
விசும்பலுடனும் ...!!!

இங்குதான் -ஓர்
பூக்களின் ஆராட்சியாளனாய்
நானுனக்கு அறிமுகமானேன் 
நாம் பழமைவாதிகளானோம்
நான்கு சுவருக்குள் 
உன் நடிப்பை மெச்ச -என்
புன்னகை மட்டுமே மிச்சம் 

அறுவகைக் கனிகள் 
அருகிருந்தும் 
சுவை உணரா-இரு தலைக்
காய்களில் சிக்குண்டேன் 
தேக்குமரம் துடிக்கிறது-ஒரு
பாக்கு மரம் வெடிக்கிறது...!!

எதைச் சொல்வது 
உன் முன் மட்டும் தான் 
கிழவனாகவும் வாழக் 
குழந்தையாகவும் முடிகிறது 
கழுமரத்தில் ஏறித் 
தேன் பருகும் நேரமிது 

யுத்தமொன்று தொடங்கி 
காந்த வியூகம் வகுத்தவளே
சத்தமிடுகையில்
எதிர் முனைவு-நீ
உச்சம் கொள்கையில் 
நேர்முனைவு ...!!!

பகடையாய் உருட்டப்படுகிறது
பகல் -பணயம்
வைக்கப்பட்டிருப்பது இரவு 
என் ஆண்மை
விழுங்கி அருவியாய் நீ
அதுவும் அநாதை போல்
உன்னில்
அடைக்கலமாகின்றது

No comments:

Post a Comment